Tuesday, November 19, 2013

மழை

உன் மேனியை நீராடையால்

அலங்கரிக்க வானம் கொண்ட

நிர்வாணக் கோலம் தான்

மழையோ?

இல்லை உன் முகத்தை படம் எடுக்க முடியாமல்

வானம் என்னும் கண்ணாடி உடைந்து

சிந்தும் துகள்கள்தான் மழையோ?

இல்லை

சூரியன் உன்னோடு

விளையாட நீர்த்துளிகளாய்

அவதரித்தது தான் மழையோ?



***********************************************


யாருன்னை முதன் முதலாய்

மழையால் நனைப்பதென

மேகங்கள் கொள்ளும் ஊடல் தான்

இடியின் சத்தமோ???



***********************************************


வெகு நேரமாய் மழை துளியை

தாங்கி நிற்கும் இலை தன்னை

காற்று தீண்டியதும் தவறவிடும்

அந்த மழைத்துளியை...

நெடுங்காலம் நான் தாங்கி நிற்கும்

காதல் தன்னை உன் பார்வை தீண்டியதும்

தவறவிடும் என் மனத்துளியை போல்...


*************************************************


மழையில் நனைந்த உன் கூந்தலை

நீ வேகமாய் துவட்டிக்கொண்டிருக்க

தன் மீது கோவம் கொள்கிறாய் என்று

இன்னமும் வேகமாய் அழுகிறது மழை...


*************************************************


நீ சாலையில் நடந்து செல்கையில்

பெய்யும் மழை துளிகள் சுமந்து வரும்

உன் பிம்பங்களில் மோதி மோதியே

நெஞ்சம் நனைகிறது என் காதல்...


************************************************


உன் வீட்டு ஜன்னலில்

கைகள் நீட்டியபடியே

மழைத்துளிகளை நீ சேகரித்து

விளையாடிக் கொண்டிருந்தாய்

உன் செய்கையை கண்டு

என் இதயம் காதலை சேகரித்து மனம்

வினையாகிக் கொண்டிருப்பதை அறியாமல்...


***************************************************


முத்தெடுக்க முக்குளிக்க வேண்டுமாம்

நான் முத்தேடுகிறேன் நீ கால் நனைத்தும் நனைக்காமலும்

விளையாடி சென்ற தேங்கிய மழை நீரில்...

- தனிமைரசிகன்.

சிறு மீனாய் !

என் நினைவுகளில் எத்தனை சல்லடைகள் போட்டு தேடினாலும் நான் அகப்படவில்லை !
உன் நினைவுகளில் ஒற்றை தூண்டிலிட்டாலும் சிக்கி விடுகிறேன் சிறு மீனாய் !

- தனிமைரசிகன்.

இதயக்கண்ணாடி !

தினமும் உன்னை படம் எடுக்கும் உன் வீட்டு நிலைக்கண்ணாடிக்கு தெரியாது
அதைவிட அதிகமாய் உன் பிம்பம் விழும் இடம் என் இதயக்கண்ணாடி  என்று !



- தனிமைரசிகன்.

Thursday, March 5, 2009

சுமை...

உன் நினைவுகளை
என் இமைகள் சுமக்க முற்பட்டதால்
என் நினைவுகள்
இன்று உன் உறக்கத்தை சுமந்து நிற்கின்றன

- தனிமைரசிகன்.

Monday, February 23, 2009

மழை

அவள் மழையில் நனைந்து வந்தப்பின்

அவள் கூந்தல் சிந்தும் துளிகளில் நான் நனைகிறேன்...

என் இதயம் சுகம் கொள்ளகிறது மழையில் நனைந்ததைப்போல்...

-தனிமைரசிகன்.

Friday, June 20, 2008

புலம்பல்

பதவி இழந்த அரசியல்வாதியாய்
புலம்பிக்கொண்டிருக்கிறது உன் தலையனை...
உன்னுள் நான் வந்ததினால்...


-தனிமைரசிகன்.

Monday, April 7, 2008

எனது தேசத்தாயின் அவலம்...

இரண்டு குழந்தைகள் பெற்ற தாய்,
இரண்டு குழந்தைகளும் அழும் போது
ஒரு குழந்தைக்கு ஒரு மார்பகம் என்று தந்திருப்பாள்...
அதே மூன்றாவது குழந்தை பிறந்து
அதுவும் பசியால் அழுதால்,
அவள் யோசிப்பாளா இன்னொரு மார்பகம் வேண்டும் என்று???

இதோ என் இந்திய தாய்க்கு பிரிவினை பிரச்சனை...
அவளுக்கு 26 குழந்தைகள்...
குழந்தைக்கொரு ஆறு என்றிருந்திருந்தால்...
அவளுக்கு சந்தோஷம் தான்...
இன்று தமிழ் நாடென்னும் குழந்தையும்...
கர்நாடகம் எனும் குழந்தையும் இப்படி
அவளிடம் சுரக்கும் பாலுக்காக
தங்கள் ரத்தத்தை வழிய விட்டு கொண்டிருக்க மாட்டார்கள்...

மூடர்களே தாயின் மார்பில் சுரக்கும் பால்
எந்த குழந்தைக்கு சொந்தம் எனும் பிரச்சனை வந்தால்
தாய்க்கு இழுக்கு இல்லையா???

இந்தியத் தாயே எங்களை மன்னிபாயாக...

-தனிமைரசிகன்.